📰 தூத்துக்குடி லீக்ஸ்
தூத்துக்குடி: அக் 21
தொடர்ந்து பெய்து வரும் கனமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன் மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி, மின்வாரியம், வருவாய்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது:
“தொடர்ச்சியான கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் மழையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.”
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்சார வாரியம், நெடுஞ்சாலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு தனித்தனியாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்கள், மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வருவாய் துறையினர் குளங்கள், அணைகள் ஆகியவற்றின் நீர்மட்டம் மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவை கண்காணித்து, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 38 மோட்டார் ரூம் மற்றும் 58 நீர்மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மிக கனமழை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு தேவைப்படும் சூழ்நிலையில் தங்குவதற்கான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) குழுவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.