Tamil Nadu updates photo news by Arunan Reporter தூத்துக்குடி லீக்ஸ்’ பிரத்யேக நாளிதழ் செய்தி:
தூத்துக்குடி திமுகவில் 3 மாவட்டங்கள் உதயமாகிறது! மா.செ நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டி!
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் தயாராகி வருகின்றன. இதுவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டக் கழகங்களாகச் செயல்பட்டு வந்த தூத்துக்குடி, தற்போது கட்சி நிர்வாக வசதிக்காகவும், வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும் மத்திய, வடக்கு, தெற்கு என 3 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட உள்ளது (தலா 2 சட்டமன்றத் தொகுதிகள் வீதம்).
இந்த அதிரடி மாற்றத்தால், மாவட்டத்தில் உள்ள 3 மா.செ பதவிகளையும் கைப்பற்ற திமுக மூத்த நிர்வாகிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை கடுமையான போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.
தெற்கு மாவட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஓய்வு? புதுமுகங்கள் போட்டி! திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மா.செ பொறுப்பு வழங்கப்படாது என்ற தலைமை அறிவித்துள்ள விதிமுறையின் காரணமாக, 74 வயதாகும் தற்போதைய தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அப்பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக காலியாகும் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு:
- ஜோயல்
- செங்குழி ரமேஷ்
- உமரி சங்கர்
- ஜனகர்
- வி.பி. ராமநாதன்
- சொர்ணகுமார்
ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு மாவட்டம்: 3 பேர் போட்டி! விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளை உள்ளடக்கிய புதிய வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு:
- மார்க்கண்டேயன்
- கருணாநிதி
- ஆகாஷ் பாண்டியன்
- வசந்தம் ஜெயக்குமார்
ஆகிய முன்னணி நிர்வாகிகள் விருப்பம் காட்டி, தலைமையின் பார்வையை ஈர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மாவட்டம்: அக்கா - தம்பி இடையே உச்சகட்ட போட்டி! அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தூத்துக்குடி மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்குத் தான் மாவட்டத்தில் உச்சகட்ட அரசியல் போரே நடந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும், அவரது தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியும் இந்த நாற்காலியைக் கைப்பற்றப் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமியின் பாரம்பரியம்: தூத்துக்குடியில் நீண்ட காலம் மா.செ-வாக ஆதிக்கம் செலுத்திய மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ என். பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு (2017), அவரது மகள் கீதா ஜீவன் அந்தப் பொறுப்பிற்கு வந்தார்.
- ஜெகன் பெரியசாமியின் உத்தி: தற்போதைய மேயராக இருக்கும் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடியின் 60 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பகுதி/வட்டச் செயலாளர்களைத் தன் பக்கம் இழுக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.அது போக ஓட்டப்பிடாரம் பகுதி நிர்வாகிகளையும் வளைத்து வைத்துள்ளாராம்.
- கீதா ஜீவனின் பலம்: முன்னாள் அமைச்சரான கீதா ஜீவன், தொகுதியிலுள்ள அடிமட்டக் தொண்டர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகளைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பது அவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.
தங்கள் தந்தை வகித்த செல்வாக்குமிக்க மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அக்கா-தம்பி இருவருமே நிர்வாகிகளைக் கவனிக்கும் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளதால், தூத்துக்குடி உடன்பிறப்புகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தலைமை யாரைக் கைநீட்டப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!










