Tamil Nadu updates தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி அருணன் செய்தியாளர்
தவறான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு
தூத்துக்குடி, ஜூலை 31:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி,
அக்கிராம பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 24.06.2026 அன்று மேலஈரால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நான்கு கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கண்மாய் மற்றும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத் துறையினரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த சேதமடைந்த கிணறு மற்றும் கண்மாயால் விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில், ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தோட்டக் கிணற்றில் தோண்டப்பட்ட சரள்மண்ணை டிராக்டர் மூலம் கண்மாய் மற்றும் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தபோது, எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்போது, மேலிடத்திலிருந்து புகார் வந்திருப்பதால் காவல் நிலையத்திற்கு வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறியதாகவும், பின்னர் வாகனம் மற்றும் ஓட்டுநரை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் பணிக்காகவே மண் எடுத்துச் செல்லப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யாமல் வாகனத்தையும் ஓட்டுநரையும் விடுவிப்பதாகவும், இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 21.07.2026 அன்று மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, 22.07.2026 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது 12.06.2026 தேதியிட்ட குற்ற எண்கள் 240/2026 மற்றும் 241/2026-இல் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலஈரால் கிராம மக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படவிளக்கம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவரிடம் மனு அளித்த பின்னர் மேலஈரால் கிராம பொதுமக்கள் குழுவாக நின்ற காட்சி.






