தூத்துக்குடி, ஜூலை 25:
தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு, அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம் (24) என்பவரை, எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது அருணாச்சலத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த தகவல் பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் முன்பு திரண்டனர். காவல் விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், மரணமடைவதற்கு முன்பு போலீஸ் தாக்குதல் குறித்து அருணாச்சலம் வீடியோவில் பேசியிருப்பதாகவும், சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அருணாச்சலத்தின் தாய் பரமேஸ்வரி, தந்தை நாகராஜ் மற்றும் சகோதரர் சுடலைமணி ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தேமுதிக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அருணாச்சலத்தின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தேமுதிக சார்பில் நிதியுதவியை வழங்கினர். மேலும், அருணாச்சலம் உயிரிழப்பு சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி, உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சம்சுதீன், லிவிங்ஸ்டன், மாவட்ட பொருளாளர் ராஜன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், கணேசன், முருகன், விக்னேஷ் ராஜ், பகுதி செயலாளர்கள் நாராயணமூர்த்தி, வல்லரசு, துறைசார்பு அணி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அந்தோணி ராஜ், இருளப்பசுவாமி, அருண், சபரீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.






