Tamil Nadu updates, அருணன் செய்தியாளர்
மக்களவை தொகுதி மறுசீராய்வு மசோதாவுக்கு எதிர்ப்பு
தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம்
தூத்துக்குடி:
மக்களவை தொகுதி மறுசீராய்வு (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய இந்த நடைபயணம், ஒன்றாம் கேட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை வரை நடைபெற்றது.
நடைபயணத்திற்கு மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர் கற்பகவள்ளி சேகர், மாநில பேச்சாளர் அப்துல் மஜீத், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநகர கிழக்கு மண்டல தலைவர் ஜசைஸ் செல்வா, எஸ்.சி./எஸ்.டி. மாவட்ட தலைவர் பிரபாகர், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சுரேஷ் பர்ணாரந்து உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
“மக்களவை தொகுதி மறுசீராய்வு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்”
நடைபயணத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகையில், “மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கும் அரசியல் முயற்சி” என குற்றம்சாட்டினர்.
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீராய்வு செய்வதற்கான முயற்சியால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படும் என்றும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்தும் வகையில் மறுசீராய்வு செய்யப்பட்டால், உத்தரப்பிரதேசத்தின் மக்களவை தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான தொகுதி எண்ணிக்கை இடைவெளி மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
“தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பறிபோகும்”
நாடாளுமன்றத்தில் எண்களின் பலமே முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நிலையில், தென் மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கடந்த காலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை முடக்கப்பட்டதாகவும், அந்த பாதுகாப்பை அகற்றும் முயற்சியே தற்போது நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
“சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகே தொகுதி மறுசீராய்வு”
சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தேவையான தரவுகள் முழுமையாகப் பெறப்படுவதற்கு முன்பாக தொகுதி மறுசீராய்வு மேற்கொள்ளப்பட்டால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
“தமிழ்நாட்டின் சுயமரியாதை, அரசியல் உரிமை மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது. மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தொகுதி மறுசீராய்வு நடவடிக்கையையும் எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்” என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், “தமிழ்நாட்டின் நலனுக்கும், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுதி மறுசீராய்வு செய்யக்கூடாது. தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையிலான எந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும்” என நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நடைபயணம், ‘QUIT UNFAIR DELIMITATION MARCH’ என்ற பெயரில் நடைபெற்றதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






















