தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே 14 கிலோ கஞ்சா பறிமுதல் 3 இளைஞர்கள் அதிரடி கைது!
தூத்துக்குடி | செப்டம்பர் 16, 2026:
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெனிதா தலைமையிலான காவல் துறையினர் உழவர் சந்தைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 3 நபர்களைப் பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் மேரி ஜெனிதா வழக்குப்பதிவு செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட:
- காசிபாண்டி (22), த/பெ. காளியப்பன் (கயத்தாறு, தூத்துக்குடி மாவட்டம்)
- ராஜகோபால் (24), த/பெ. ராமச்சந்திரன் (தாழையூத்து, திருநெல்வேலி மாவட்டம்)
- ரமேஷ் (23), த/பெ. மணி (மானூர், திருநெல்வேலி மாவட்டம்)
ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 14 கிலோ கஞ்சா மற்றும் செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




