மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு தூத்துக்குடியில் பிரம்மாண்ட நிகழ்வு!
தூத்துக்குடி, ஆக. 19: தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று (19.08.2026) மாலை 6 மணியளவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளருமான கீதா ஜீவன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தங்களை இணைத்துக் கொண்டனர்.
முஸ்லிம் லீக் நிர்வாகிகள் திரளாக இணைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி இயக்கத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்து முடிவெடுத்தது. இந்த முடிவால் எழுந்த கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பும் அசௌகரியமும் நிலவி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கட்சியின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிலிருந்து விலகினர்.
இன்று மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், அவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் சேர்ந்தனர்.
புதிய உறுப்பினர்களுக்குக் கழகச் சால்வை அணிவித்து, திமுகவின் கொள்கைப் பாதையில் உறுதியோடு பயணிக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
























