Tamil Nadu updates,
photo news by Arunan journalist
தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார் — போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை
தூத்துக்குடி, ஆக.10:
தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான குருஸ் பர்ணாந்து சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
குருஸ் பர்ணாந்து சிலை சிக்னல் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், குறிப்பிட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க நிரந்தர போக்குவரத்து காவல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.
இந்த மையத்தின் மூலம் அப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
video
மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பது குறித்த சோதனைகளும் நடத்தப்படும். போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சுனை முருகன் நன்றி கூறினார்.
குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீரான போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























