Tamil Nadu updates 18-2-2026
கரூர் பெ18
கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலையில் அமைந்துள்ள அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வருகின்ற 22.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி, மாநில கௌரவ செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலயத்திற்கு நேரில் வருகை தந்து நடைபெற்று வரும் மஹா கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டனர்.
பின்னர், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அவர்களின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
குறிப்பாக சுகாதாரமான குடிநீர், போதிய கழிப்பறை வசதிகள், மருத்துவ உதவி மையம் மற்றும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு திருக்கோயில் அதிகாரியிடம் மனு அளித்து பக்தர்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.
கும்பாபிஷேக விழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
—










