தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, ஏப். 8:
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் தூத்துக்குடி நகரின் முக்கியமான பகுதியாகிய விவிடி சிக்னல் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்...
சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ட்ரோன் கேமரா மூலம் வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் கவனிக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்ல காவல்துறையின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி நகரம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.