Tamil Nadu updates photo news by Arunan
தூத்துக்குடி லீக்ஸ் 23.03.2026
தமிழக அரசியல் களம் என்றாலே சுவர் முழுவதும் வண்ண விளம்பரங்கள், பிரமாண்ட கட்-அவுட்கள், தெருக்களில் முழங்கும் பிரசாரப் பாடல்கள் என பாரம்பரிய காட்சிகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், இந்த மரபு முறைகளைத் தாண்டி, கண்ணுக்குத் தெரியாத ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) மற்றும் ‘அல்காரிதம்கள்’ (Algorithms) முக்கிய பங்காற்றப் போவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்பெல்லாம் வாக்காளர் பட்டியல் என்பது கையில் பிடிக்கும் ஒரு காகிதமாக இருந்தது. தற்போது அது முழுக்க முழுக்க ‘டேட்டா’ ஆக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிடும் PDF பட்டியல்களை, நவீன ஏஐ மென்பொருள்கள் சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்து, ஒரு பகுதியின் சமூக அமைப்பு, வயது விபரம், கடந்த தேர்தல் வாக்கு போக்கு போன்ற அனைத்தையும் துல்லியமான புள்ளிவிவரங்களாக மாற்றி வழங்குகின்றன.
மைக்ரோ டார்கெட்டிங்
இதன் தொடர்ச்சியாக ‘மைக்ரோ டார்கெட்டிங்’ முறை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகள், சமூக வலைதளங்களில் வாக்காளர்களின் நடத்தை, விருப்பங்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட விளம்பரங்களை அனுப்புகின்றன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இல்லத்தரசிகளுக்கு விலைவாசி குறைப்பு போன்ற செய்திகளை குறிவைத்து அனுப்பும் இந்த முறை, தேர்தல் பிரசாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் போஸ்டர்கள்!!!
ஒரு காலத்தில் பிரசார வீடியோ அல்லது போஸ்டர்கள் தயாரிக்க அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்பட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க முடிகிறது. இது சிறிய கட்சிகள் மற்றும் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பெரும் ஆதரவாக மாறியுள்ளது.
போலி வீடியோக்கள்!!!
மேலும், பெருநகரங்களில் கட்சிகள் அமைத்துள்ள ‘டிஜிட்டல் வார் ரூம்கள்’ 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
ஒரே நபர் பல இடங்களில் வாக்காளராக இருப்பதை கண்டறிதல், எதிரணி பரப்பும் போலி வீடியோக்கள் (‘டீப் பேக்’) கண்டறிதல் போன்ற பணிகளில் ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தேர்தல் கண்காணிப்பு முறைகளும் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளது.
இந்த நிலையில், ‘மனித உழைப்புடன் இணைந்த ஏஐ வேகம்’ தான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற புதிய அரசியல் உண்மை உருவாகியுள்ளது.
மேடைப் பேச்சுகளுக்கு இணையாக, ‘அல்காரிதம்’ ஆதரவும் அவசியம் என்ற நிலை தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.
இதேவேளை, மறைந்த தலைவர்களின் உருவம் மற்றும் குரலை ஏஐ மூலம் மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் யுக்தி!!!
முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பேசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, வாக்காளர்களிடையே உணர்ச்சி ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மொத்தத்தில், ‘டிஜிட்டல் சாணக்கியம்’ எனப்படும் இந்த புதிய தேர்தல் யுக்தியில், யார் முன்னிலை வகிப்பார்கள் என்பது தேர்தல் முடிவுகளால் தான் வெளிப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





