தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி ஏப்ரல் 20
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை நாளை (21.04.2026) மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் 23.04.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 126ன் கீழ், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவொரு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவை நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ, பங்கேற்கவோ கூடாது.
வாட்ஸ் அப் தடை!!!
மேலும், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2ஆண்டுகள் சிறை தண்டனை !!!
பொது மக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை நிகழ்ச்சி அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொகுதி வெளியிலிருந்து வந்துள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கண்காணிப்பு!!!
கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
வேட்பாளர்களுக்கான வாகன அனுமதிகளும் மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது ஆகும். வாக்குப்பதிவு நாளன்று, வேட்பாளருக்கு ஒரு தனிப்பட்ட வாகனம், தேர்தல் முகவருக்கொரு வாகனம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர அல்லது திரும்ப அழைத்துச் செல்ல வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனங்களை பயன்படுத்துவது முறைகேடாக கருதப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே, இரண்டு நபர்கள் மட்டுமே கொண்ட தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்டம் கூடாதபடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை சீராக பயன்படுத்துமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.


















