தூத்துக்குடி லீக்ஸ் | சனி, 28 பிப்ரவரி 2026
photo news by Arunan journalist
சென்னை, 28 பிப்ரவரி:
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை நேரடியாக எடுத்துரைத்தார்.
கோரிக்கை 1 — காயிதே மில்லத் பல்கலைக்கழகம்:
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். இதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை 2 — சூரிய ஒளி இலவச மின்சாரம்:
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதை மத்திய அரசு தடுக்கும் நிலையில், சூரிய ஒளி மின்சாரம் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரினார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.
கோரிக்கை 3 — கட்டபொம்மன் சத்திரம் பிரச்சினை:
திருச்செந்தூரில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டபொம்மன் வாரிசுகள் பயன்படுத்தி வரும் கட்டபொம்மன் சத்திரத்தில் இந்த ஆண்டு நுழையக் கூடாது என அறநிலையத் துறை இணை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார். வேறொரு குடும்பத்தினர் கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா அவரின் கையெழுத்தை பொய்யாக பெற்று இந்த ஆணையை பெற்றுள்ளனர். இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்யுமாறு வைகோ முதலமைச்சரிடம் முறையீடு செய்தார்.
உடனடியாக அமைச்சர் சேகர்பாபுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனிச் செயலாளருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மார்ச் 3ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆணை ரத்தாகும் என நம்புவதாக வைகோ தெரிவித்தார்.
— மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம், சென்னை-8, 28.02.2026








