Tamil Nadu updates
photo news by Arunan journalist
தூத்துக்குடி லீக்ஸ் பிரத்யேக செய்தி!
தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் கேள்வி!
தூத்துக்குடி: மே20
மே மாதம் பாதியை கடந்த நிலையிலும் தூத்துக்குடியில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகம் தணிக்க மாநகராட்சி சார்பில் இதுவரை தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றத்தில் பொதுமக்கள்:
தூத்துக்குடி மாநகரில் வருடந்தோறும் கோடைகாலம் தொடங்கிவிட்டாலே, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் அந்தந்த வார்டு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் தொடங்கி, கத்திரி வெயிலும் உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஒரு இடத்தில் கூட தண்ணீர் பந்தல் அமைக்க எவ்வித நடவடி்ககையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திமுக -அதிமுக அரசியல் கட்சிகளின் மௌனம் – தேர்தல் சோகமா?
பொதுவாக வருடந்தோறும் கோடைகாலம் வந்துவிட்டாலே தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல், மோர் பந்தல், இளநீர் என போட்டி போட்டுக் கொண்டு அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பந்தல்களை திறந்து வைப்பார்கள்.
கடந்த காலங்களில் மாவட்ட எம்பியான கனிமொழி அவர்களும் தனது சொந்த செலவில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து மக்களின் தாகம் தணித்தார்.
ஆனால், இந்த 2026-ல் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியோ, மக்கள் பிரதிநிதியோ தண்ணீர் பந்தல் அமைக்க முன்வரவில்லை. "தேர்தல் முடிவுகளின் சோகத்தில் அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதால், எங்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்க மறந்துவிட்டார்களா? அல்லது பொதுமக்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்களா?" என்று வெயிலில் அலையும் பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
எம்.எல்.ஏ ஸ்ரீநாத் நடவடிக்கை எடுப்பாரா?
தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஸ்ரீநாத் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, தூத்துக்குடியின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வார்டு பகுதிகளில் உடனடியாக கோடைகால தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை அமைக்க எம்.எல்.ஏ ஸ்ரீநாத் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்.

