Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜூன் 3:
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய நுழைவுவாயில் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் மாநகர திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேயர் ஆப்சென்ட்!!!
இந்நிலையில், வழக்கமாக கலைஞர் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இம்முறை மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளாதது...
கட்சி வட்டாரத்திலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையிலும் பேசுபொருளாக அமைந்தது.
செய்தியாளர் ஏமாற்றம்!!!
மேயரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த செய்தியாளர்களும், அவரது பங்கேற்பு இல்லாததால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தனர். மேயர் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன், மேயரின் வருகையின்மை குறித்த விவாதமும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.











