இந்து கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான தடை வேண்டும்
தமிழக அரசுக்கு இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை
தூத்துக்குடி:
தமிழக கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அமைதியான சூழலில் வழிபடுவதற்காக வருவதாகவும், கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை சரியானதே என்றும் இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
கோயில்களில் பக்தர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து, அர்ச்சகர்கள், அலுவலகப் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கக் கூடாது.
கோயில் வளாகத்திற்குள் அனைவருக்கும் எந்தவித வேறுபாடுமின்றி ஒரே மாதிரியான முழுமையான செல்போன் பயன்பாட்டுத் தடை அமல்படுத்தப்பட வேண்டும்.
இல்லையெனில் பக்தர்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் தரிசனக் கட்டணம், உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டணம், காலணி வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பக்தர்களுக்கு கூடுதல் சுமையையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, கோயில்களில் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்யவும், அவர்களின் பொருட்கள், காலணிகள் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் கட்டணமின்றி வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்துக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்துக்களின் சார்பில் தமிழக அரசுக்கு இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

