முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டம் நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
தூத்துக்குடி, ஆக. 4:
தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புகைப்பட விளக்கம்:
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அமர்ந்து முழக்கமிட்ட திமுகவினர்.











