தூத்துக்குடி லீக்ஸ் | தூத்துக்குடி | 13 மார்ச் 2026
தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 73வது பிறந்தநாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48வது வார்டு கால்டுவெல் காலணியில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ... தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,..
"மக்களோடு மக்களாக இருந்து உங்களோடு எப்போதும் பணியாற்றுவது திமுக தான். உங்களில் ஒருவராக இருந்தே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.
காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கும் நிலை மாறி, அம்மா வீடு மற்றும் உறவினர் வீடு என பல இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லும் நிலை இன்று கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தான் நங்கூரமாக இருந்து செயல்படுகிறார்கள். 1996ஆம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் நான் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
பின்னர் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என 30 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உங்களோடு பயணிக்கிறேன்" என்று அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.
மகளிர் உரிமைத்தொகையை தேர்தலுக்குப் பின் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 14 வயதில் கொடி பிடிக்க ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து இன்று கட்சித் தலைவராகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் ஸ்டாலின் பணியாற்றி வருவதை எடுத்துரைத்த அமைச்சர், 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவாதம்
விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். அதை படித்துப் பார்த்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து, தனது உதவியாளரிடம் அந்த மனுவை வழங்கினார்.
விழாவில் மாநில பேச்சாளர் சரத் பாலா பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
photo news by sunmugasuthram press club president


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக