Tamil Nadu updates
தூத்துக்குடி லீக்ஸ் — 12 மார்ச் 2026, வியாழக்கிழமை
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி சுப்புராஜ் — காளீஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் பிளஸ் 2 பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிகவும் கொடூரமான படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் இணைந்து 12-3-2026 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் பாத்திமா பாபு உரையாற்றுகையில், ...
தென் மாவட்டங்களில் இளம் மாணவிகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் ஆன தோழர் மின்னல் அம்ஜத் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிரவீனா அவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து பேச்சாளர்கள் கடும் கோபம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை — தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை என்னும் இடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் தொடர் மறியல் நடைபெற்றது.
உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழக வணிகர்களின் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தெர்மல் ராஜா , ..நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நெய்தல் அன்டோ உடன் வந்து மாணவி பிரதீபாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அன்றே கைது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்களை கண்டறிந்து பள்ளிகளில் ஒழுக்க கல்வி வழங்க வேண்டும் என்றும், போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்ட குழுவின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக