Tamil Nadu updates
photo news by Arunan Reporter
மாமன்றக் கூட்டத்தில் தவெகவில் இனைந்த கவுன்சிலர்கள் அமளி வெளிநடப்பு? கல்வெட்டுகளில் யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இடம் தொடர்ந்து பிரச்சினை செய்வதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு தெரிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், ...சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்ட கவுன்சிலர்கள் மந்திர மூர்த்தி (முன்னாள் அதிமுக) மற்றும் ராமர் (முன்னாள் திமுக) ஆகியோர் தங்களது இருக்கையில் அமராமல் எழுந்து நின்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். அவர்களை இருக்கையில் அமருமாறு மேயரும் ஆணையரும் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும், அதை ஏற்க மறுத்த இருவரும் மேயரின் இருக்கை அருகில் வந்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்
"திமுக முன்னாள் எம்.எல்.ஏ சண்முகய்யா தொகுதியின் மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை விட்டுவிட்டு அமைச்சர் மதன் ராஜா பெயரைக் கல்வெட்டில் பொறித்துத் திறந்து வைக்கிறார்கள். யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "இங்குள்ள அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்த மன்றத்தில் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையர் முன்பாகவே தவெக கவுன்சிலர்களிடம் அருகில் வந்து எதிர்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தவெக உறுப்பினர்கள் இருவரும் மாமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுப் பரிசீலனைக்குப் பின் நிறைவேற்றப்பட்டன. மாமன்ற உறுப்பினர்களின் இந்த மோதல் சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




































