வியாழன், 27 ஆகஸ்ட், 2026

வசூல் மழையில்” மாநகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பது யார்?

 

“வசூல் மழையில்” மாநகராட்சி அதிகாரிகள்? நடவடிக்கை எடுப்பது யார்?

மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் பெயரில் வியாபாரிகளிடம் நிதி வசூல்? — மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி

தூத்துக்குடி:ஆக28

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வியாபாரிகளிடம் நிதி வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


thoothukudileaks


 இதற்காக மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அணுகி நிதியுதவி கோருவதாக வியாபாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரக்கன்றுகளை நடுவதற்குத் தேவையான கூண்டு உள்ளிட்ட பொருட்களுக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாகவும், இதனால் பல்வேறு வியாபாரிகள் மனஉளைச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“ஆணையர் உத்தரவு” என்ற பெயரில் வசூலா?

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தொடர்பாக வியாபாரிகள் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் நடைபெறுவதாக கூறப்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


முன்னதாக மாநகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்ட பொதுநலப் பணிகளுக்காக வியாபாரிகளிடம் நிதியுதவி பெறப்பட்டபோது, நிதியுதவி செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஆனால், தற்போது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வியாபாரிகளிடம் நிதி வசூலிக்க மாநகராட்சியால் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், வசூலிக்கப்படும் தொகைக்கு ரசீது அல்லது உரிய ஆவணங்கள் வழங்கப்படுகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


ஏற்கனவே லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.


மேலும், இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மண்டலத் தலைவர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளின் மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்குமா?

மரக்கன்றுகள் நடுவது வரவேற்கத்தக்க திட்டமாக இருந்தாலும், அதற்கான செலவினங்களை பொதுமக்கள் அல்லது வியாபாரிகளிடம் இருந்து கட்டாயமாக வசூலிக்கக் கூடாது என்பதே வியாபாரிகள் தரப்பின் கருத்தாக உள்ளது.


எனவே, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வியாபாரிகளிடம் நிதி வசூலிக்க மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? வசூலிக்கப்படும் தொகை எந்தக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது? இதற்கான ரசீது வழங்கப்படுகிறதா? உள்ளிட்ட விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், அதிகாரிகளால் கட்டாய வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உடனடியாக விசாரணை நடத்தி, விதிமுறைகளை மீறி வசூல் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மரக்கன்றுகள் நடும் நல்ல திட்டம்—வசூல் சர்ச்சையால் விமர்சனத்திற்கு உள்ளாகாமல், திட்டத்தின் நிதி விவரங்களில் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்குமா? என்பதே தற்போது தூத்துக்குடி வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக