திமுக நிர்வாகிகள் பதவிக்கு வயது வரம்பு நடைமுறை சிக்கல்கள் குறித்து தலைமை ஆலோசிக்க வேண்டும்
தூத்துக்குடி: ஆக 26
திமுகவின் சமீபத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சி அமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பகுதி செயலாளர், வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட அமைப்பு பதவிகளுக்கு வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து கட்சியினர் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட அமைப்பு பதவிகளை இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்றும், வட்ட செயலாளர் 45 வயது வரை மட்டுமே அந்தப் பதவிகளில் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், 45 வயதுக்குள் ஒரு நிர்வாகியின் பதவிக்காலம் முடிவடைந்தால், அடுத்த கட்டத்தில் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும், நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் நிர்வாகிகள் திடீரென பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்களைவிட வயது குறைந்த புதிய நிர்வாகிகள் அதே பொறுப்புக்கு வரக்கூடும். அப்போது, இதுவரை பொறுப்பில் இருந்த மூத்த நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளின் கீழ் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுவதால், கட்சிக்குள் சில சங்கடங்களும் நடைமுறைச் சிக்கல்களும் உருவாக வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கட்சியின் வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் அனுபவமிக்க நிர்வாகிகளின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, வயது வரம்பு மற்றும் பதவிக்காலம் தொடர்பான விதிமுறைகளை திமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் நிர்வாகிகளின் அனுபவத்திற்கும் ஏற்ற வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக