Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடி, பிப்.13:
அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியிலும் இன்று பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.
கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது.
இதன்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் கடந்தும், பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையிலும், ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் வாய் மொழி உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்தபோது, ஜனவரி மாத ஊதியத்தில் தொகை சேர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜனவரி மாத சம்பளத்தில் அது சேர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து மூட்டா மற்றும் ஏயூட்டி அமைப்புகளின் சார்பில் கடந்த 16 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, 05.02.2026 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி, பிப்ரவரி மாத சம்பளத்தில் தொகை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மூட்டா மூன்றாம் மண்டல பொருளாளர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. TNGEA மாநில துணைத் தலைவர் முருகன் தொடக்க உரையாற்றினார். மூட்டா மத்திய இணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரையாற்றினார்.
TNPTF மாவட்ட செயலாளர் ஆனந்தி, TANSTAC மண்டல செயலாளர் கணேசன், SFI மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். TNGEA மேனாள் இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். மூன்றாம் மண்டல செயற்குழு உறுப்பினர் வேல்குமார் நன்றியுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதோடு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக