தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ்
சிறப்பு செய்தி அருணன் செய்தியாளர்
தமிழகம் முழுவதும் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்
98 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் – சென்னையில் 3-ல் ஒருவர் வாக்குரிமை இழப்பு
தமிழ்நாடு முழுவதும் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் 38 மாவட்டங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்குவதற்கு முன் தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் வாக்காளர்களாக இருந்த நிலையில், தற்போது அது 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் அதிர்ச்சி: 3-ல் ஒருவருக்கு வாக்குரிமை நீக்கம்
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 35.58 சதவீதம் ஆகும். அதாவது, சென்னையில் மூன்று பேரில் ஒருவருக்கு வாக்குரிமை பறிபோயுள்ளது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய மாவட்டங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்
- திருப்பூர் – 5.63 லட்சம் (23%)
- கோவை – 6.50 லட்சம் (20.17%)
- திருவள்ளூர் – 6.19 லட்சம் (17.30%)
- செங்கல்பட்டு – 7.01 லட்சம் (25.20%)
- சேலம் – 3.62 லட்சம்
- மதுரை – 3.80 லட்சம்
- திருச்சி – 3.31 லட்சம்
- ஈரோடு – 3.25 லட்சம்
தூத்துக்குடி மாவட்டம்: 1.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 527 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 10.9 சதவீதம் ஆகும். எஸ்.ஐ.ஆர்.க்கு முன் 14,90,685 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 13,28,158 ஆக குறைந்துள்ளது.
நீக்கத்திற்கான காரணங்கள் என்ன?
சரியான முகவரியில் வசிக்காதோர்,
உயிரிழந்தவர்கள்,
முகவரி மாற்றம் செய்தவர்கள்,
இரட்டைப் பதிவாளர்கள் உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நீக்கத்திற்குமான காரணங்களும் வரைவு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு
நீக்கப்பட்ட காரணங்கள் தவறானவை என கருதுபவர்கள் ஜனவரி 18-ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
- இடம் மாறியவர்கள் – படிவம் 8
- புதிய வாக்காளர்கள் – படிவம் 6
என்ற படிவங்களை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
பட்டியல் பார்வையிட எங்கே?
இந்த வரைவு வாக்காளர் பட்டியலை
- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம்
- மாவட்ட ஆட்சியரகங்கள்
- மாநகராட்சி அலுவலகங்கள்
- voters.eci.gov.in இணையதளம்
மூலம் பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.
ஒரு மாத அவகாசம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு வெளியான இந்த வரைவு வாக்காளர் பட்டியல், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக