தூத்துக்குடி, டிச.23 :
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் QR Code ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி சைபர் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில் உணவு உண்ட வாடிக்கையாளர் ஒருவர், அதற்கான தொகையை QR ஸ்கேனர் மூலம் அனுப்பிய நிலையில், அந்த பணம் ஹோட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் உரிமையாளர், தனது கடையில் இருந்த QR Code ஸ்கேனர் சாதனத்தை சோதனை செய்த போது, அதில் வேறு ஒருவரின் வங்கி கணக்கைச் சேர்ந்த QR Code ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர், நேற்று (22.12.2025) தேசிய சைபர் குற்ற புகார் தளம் (NCRP) மூலம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொழில்நுட்ப ரீதியான விசாரணையில், அந்த QR Code-இன் வங்கி கணக்கும், அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்ணும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
![]() |
| ஹோட்டலில் QR Code ஸ்டிக்கரை மாற்றி சைபர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முருகானந்தம். |
அதில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் முருகானந்தம் (26) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவரது செல்போன் இருப்பிடம் தூத்துக்குடி பள்ளிவாசல் பஜார் பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, நேற்று (22.12.2025) சைபர் குற்றப்பிரிவு போலீசார், எதிரி முருகானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஹோட்டலில் தனது வங்கி கணக்கின் QR Code ஸ்டிக்கரை ஒட்டி, வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியாக பெற்றது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
மேலும், இதுபோன்று வேறு இடங்களிலும் QR Code மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறு வணிகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளும், தங்கள் கடைகளில் பயன்படுத்தப்படும் QR Code-களை அடிக்கடி சோதனை செய்து, இவ்வகை சைபர் மோசடிகளைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
👉
.png)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக