செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு

 # தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு


தூத்துக்குடி, ஏப்ரல் 1: தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டுள்ளனர். 




இந்த செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



 சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி தலைமையிலான குழுவினர் காணாமல் போன செல்போன்களின் IMEI எண்களைக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தினர்.


விசாரணையின் மூலம் கண்டறியப்பட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து, மொத்தம் ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை, இன்று (01.04.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஒப்படைத்தார்.


இதுவரை மொத்தம் ரூபாய் 1,13,30,000/- மதிப்புள்ள 1065 காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டறிந்து மீட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். நிகழ்வின் போது, சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


பொதுமக்கள் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தோ தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.


 மேலும், செல்போன் தொலைந்துவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவரங்களுடன் CEIR.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்  சகாய ஜோஸ் உள்ளிட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக