வியாழன், 8 டிசம்பர், 2022

ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய 17 பேர் மீது ஆணையத்தின் பரிந்துரைப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

   thoothukudileaks 8-12-2022

 எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையின் அநியாய துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றப்படுத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.



விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், பரிந்துரைகளும் கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அறவழியில் போராடிய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிருகத்தனமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்த தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மட்டுமின்றி, மூன்று வருவாய் துறை அதிகாரிகள், அப்போதைய தென் மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.


ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு விரைவாக நீதி கிடைக்கப்பெற வேண்டும், தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நீதியை விரும்பும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும். விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது உரையாற்றிய தமிழக முதல்வர் அவர்களும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தவறிழைத்தவகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தெரிவித்தார். 


ஆனால், இதுதொடர்பாக வெளியான அரசாணையில் உயர் அதிகாரிகள் மீது நீதித்துறை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாமல், துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. குற்றத்தில் தொடர்புடைய கடைமட்டத்தில் உள்ள 7 காவலர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படுவது ஏற்புடையதல்ல.


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் முழுக்க முழுக்க ஆலை நிர்வாகம் மற்றும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான உயர் அதிகாரிகளின் சதியின் பேரிலேயே நிகழ்ந்துள்ளது என்பது ஆணையத்தின் அறிக்கை மூலம் தெரிய வருகிறது.  அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பெரும் குற்றத்தை இழைத்தது என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கை அல்ல; மாறாக அது ஆலைக்கு ஆதரவான சதியின் அடிப்படையிலான நடவடிக்கை என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கையாகும். சதிச் செயல் மூலம் 13 உயிர்களை கொன்ற குற்றத்திற்கு வெறும் துறை ரீதியான நடவடிக்கை என்பது நீதி மற்றும் சட்ட அடிப்படையிலான நடவடிக்கை அல்ல.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம் என்று உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பின்னர், துறை ரீதியான நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வது என்பது நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுவது போல் உள்ளது.


ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய 17 அதிகாரிகள் மீது மட்டுமின்றி, தொடர்புடைய அனைத்து அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கையை தாமதமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக