வியாழன், 23 ஜூலை, 2026

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாசலம் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல் நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணாசலம் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல்  நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனும், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்–பரமேஸ்வரி தம்பதியரின் மகனான அருணாசலம், கடந்த 2026 ஜூலை 17-ஆம் தேதி எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


விசாரணைக்காக காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது காவல்துறையினர் தாக்கியதால் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்து போனஅருணாசலம்


இதையடுத்து, காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அருணாசலத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருணாசலம் உயிரிழப்பு குறித்து நீதிபதி தலைமையில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழணி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கீதா ஜீவன் 

நீதி கோரிக்கை

இதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் அரசு மருத்துவமனைக்கு சென்று அருணாசலத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks


அவருடன் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக பகுதி செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக