செவ்வாய், 14 ஜூலை, 2026

சந்திரசேகர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

சந்திரசேகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு  சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks


சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ....

உயிரிழந்த சந்திரசேகரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கு ஆறுதலை தெரிவித்தார்.


சந்திரசேகருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அதில் இளைய குழந்தை பிறந்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆனந்த கதிரேசன், வெங்கடேசன், ஸ்ரீராம், அருண், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் எஸ்தர் ராஜ், உதயசூரியன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை குறித்து கேட்டறிந்தனர். 



தொடர்ந்து உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மறுப்பு

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும். கொலையின் பின்னணி, முன்விரோதம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.


இதற்கிடையில், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உயிரிழந்த சந்திரசேகரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், சந்திரசேகரின் மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அல்லது நிரந்தர வாழ்வாதார உதவி வழங்க வேண்டும். மூன்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு ஏற்க வேண்டும். பச்சிளம் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்., 

வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சந்திரசேகர் குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை சட்டத்திற்குட்பட்ட ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடுவோம் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்

நிறுவனத் தலைவர்

சட்ட உரிமைகள் கழகம்


 இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக