வியாழன், 19 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது விவகாரத்தில் அடுக்குஅடுக்காக பாஜக அண்ணாமலை கேள்விகள் ?

தூத்துக்குடி லீக்ஸ்2026 மார்ச் 19

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் பத்து நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்யாதது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


இந்த நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கைது நடவடிக்கையைச் சுற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 65 வயதான முதிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். 

thoothukudileaks


பின்னர், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதன் பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கொடூர குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்தும், அந்த வழக்கை அரசு முறையாக எதிர்கொள்ளாததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும், பல வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட நபர் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரை காவல்துறை கண்காணிக்க தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டதாக கூறப்படும் நிலையில், அந்த காட்சிகளை ஆய்வு செய்ய காவல்துறைக்கு பத்து நாட்கள் எடுத்தது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் K. Annamalai தனது ஃபேஸ்புக் பதிவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

குற்றவாளி கைது செய்யப்பட்ட விதம், முன்னாள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலை, மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சர் M. K. Stalin இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– தூத்துக்குடி லீக்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக