வியாழன், 9 ஏப்ரல், 2026

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ய முயற்சி? எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த குடும்பம்

தூத்துக்குடி, ஏப்.10:

தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தம்பி கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்கிறார் என குற்றம்சாட்டி, அண்ணன் தனது குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாளின் மூத்த மகன் சுயம்புலிங்கம், தனது தம்பி அணில் சிவலிங்கம் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர்களுக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.

இதுகுறித்து சுயம்புலிங்கம் கூறுகையில், ...

தனது தம்பி அணில் சிவலிங்கம் பெங்களூரில் தொழில் செய்து வருவதாகவும், அங்கு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார். 

தனது சொத்தை கைப்பற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் சொத்து தனிப்பட்ட முறையில் தான் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனால் ஆவேசமடைந்த அணில் சிவலிங்கம், தனது காரை எரித்துவிட்டு தப்பியோடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பின்னர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஊருக்குள் வந்து சொத்தில் பங்கு கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

thoothukudileaks


மேலும் கடந்த 26ஆம் தேதி, வேலாயுதபுரம் அருகே காரில் சென்றபோது, அணில் சிவலிங்கம் மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்து, வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

 “நீ இறந்தவுடன் உன் சொத்தை உன் மனைவி, பிள்ளைகளிடம் கையெழுத்து வாங்கி விற்காமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், கடந்த 2ஆம் தேதி வேம்பார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கூலிப்படையினரை வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதனால்  தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதனை நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் சுயம்புலிங்கம் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக