thoothukudileaks 15-4-2023
திமுக மற்றும் திமுகவினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி களங்கம் கற்பிக்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
ஆதாரத்தை சொல்ல வேண்டும். 15 நாட்களில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு
இது பற்றிய செய்தியாவது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:-
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திமுக பற்றி குற்றச்சாட்டு சொல்ல போகிறார் என்றார். ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அவர் சொல்லியிருக்கிறாரா இல்லை.
அவர் சொன்ன பேட்டியை வைத்து எல்லாம் பார்க்கும் போது ...
1972ம் ஆண்டிலே, கலைஞர் மீது எம்ஜிஆர் கவர்னரிடத்தில் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, சட்டமன்றத்தில் வைத்து வரிக்கு வரி பதில் சொன்னார் கலைஞர். பதில் சொல்வதற்கு முன்பாக, எடுத்த எடுப்பிலே சொன்னார்.
இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். அதுபோல அண்ணாமலை கொடுத்து இருக்கிற எல்லாம் பார்க்கும் போது உள்ளபடியே பட்டிமன்றத்தை பார்ப்பது போல உள்ளது.
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் இடையிடையே நகைச்சுவை செய்வார்கள்.
ஒரு மணி நேரம் பார்த்தால் அரை மணி நேரம் சிரிக்க கூடிய நல்ல வாய்ப்பு இருக்கும். அதேபோல தான் அண்ணாமலையின் பேட்டியை பார்த்தால் சிரிக்க தான் தோன்றுகிறது. அவரது அறியாமையை பார்த்து, இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஐபிஎஸ் தேர்ச்சி செய்தார். எப்படி அவரை போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என்று எல்லாம் சந்தேகம் வருகிறது.
அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லியிருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதி. தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். டி.வி, பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. அவர்களும் அவ்வாறே கொடுத்துள்ளனர்.
அப்படி இருக்கும்போது அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எங்கேயாவது லஞ்சம் வாங்கினார்கள். இப்படி பண்ணியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை.
அண்ணாமலை எப்போதும் உண்மையை சொல்லி பழக்கம் கிடையாது. உதாரணத்திற்கு, சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செத்து போய் விட்டார் என்று சொன்னார்.
உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?. இதேபோல தான் அவர் சொல்கிற குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் உள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார். யார் யார் சொத்துகளையோ சேர்த்து சொல்லியிருக்கிறார். இன்றைய மதிப்பை சொல்லியிருக்கிறார். எல்ஐசி ரூ.87 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தகவல் உள்ளது.
இன்றைய மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும். அதேபோல அண்ணாமலை யார், யார் பற்றி சொல்லியிருக்கிறாரோ, அவர்கள் அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்.
அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை காட்டிலும், நீதிமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தான் அதிகமாக இருக்கும்.
ஒவ்வொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றால், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அவர் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களுக்கு புதியது அல்ல. எம்ஜிஆரே எங்கள் மீது குற்றச்சாட்டு சொன்னார். மவுண்ட் ரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தம் என்று கையெழுத்து போட்டு கவர்னரிடம் கொடுத்தார். அந்த தியேட்டர் இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தம். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருண் ஓட்டல் என்று உள்ளது. அந்த ஓட்டல் கருணாநிதிக்கு சொந்தம் என்று கவர்னரிடம் கொடுத்தார்.
அது யாருக்கு சொந்தம் என்று எல்லாருக்கும் தெரியும். அதேபோல தான் அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமானது எல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு அழைப்பார்கள். ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங்கில் ஆரம்பித்துள்ளது. .
நான் சவால் விட்டு சொல்கிறேன். 6 முறை திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை சொன்னவர்கள் ஒன்றையாவது நிரூபித்து இருக்கிறார்களா, எம்ஜிஆர் கூட ஊழல் குற்றச்சாட்டை சொன்னார். ஆட்சி அதிகாரம் 10 ஆண்டுகள் அவரிடம் இருந்தது. போலீஸ் கையில் இருந்தது, விஜிலென்ஸ் கையில் இருந்தது.
ஆனால், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. ஊழல் வழக்கு போடமுடியவில்லை. நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஜெயலலிதா கலைஞர் மீது நள்ளிரவில் பாலம் ஊழல் என்று வழக்கு போட்டார். மு.க.ஸ்டாலினை கடலூர் சிறையில் கொண்டு போய் வைத்தார்கள்.
10 வருடம் ஆட்சியில் இருந்தார்கள். ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா, நிரூபிக்க முடிந்ததா, நான் சவால் விட்டு கேட்கிறேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய அறிவுலக மேதை இல்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாவாவது ஊழல் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அண்ணாமலை சொத்துகளை சொல்கிறார். பெரிய வேடிக்கை என்னவென்றால் திமுக சொத்து என்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் எல்லாம் ஆருத்ராவில் டெபாசிட் செய்து விட்டு வயிற்றெரிச்சலோடு 2 நாட்களுக்கு முன்னர் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
84 கோடியை நேரடியாக அண்ணாமலைக்கும், அவரது சகாக்களுக்கும் கொடுத்ததாக பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்லி, கமலாலயத்தில் போராட்டம் நடத்தினார்கள்.
திமுகவை பொறுத்தவரை எங்கள் மடியில் கனம் இல்லை. வழியிலேயும் பயமில்லை. அண்ணாமலை சொல்கின்ற குற்றச்சாட்டுகள்
15 நாளில் பத்திரத்தை தர வேண்டும்’
திமுகவுக்கு ரூ.1408.94 கோடி சொத்து இருக்கிறது என்கிறார். அதன் பத்திரத்தை இன்றையில் இருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் தர வேண்டும். திமுக பள்ளி நடத்துகிறது என்கிறார். ரூ.3,418 கோடியில் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது என்கிறார்.
அந்த பள்ளிக்கூடங்கள் எந்த ஊரில் இருக்கிறது என்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய ஆதாரத்தை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அடுத்து திமுக கல்லூரி, பல்கலைக்கழகம் நடத்துவதாக சொல்லியிருக்கிறார்.
இதற்கான ஆதாரத்தை சொல்ல வேண்டும். 15 நாட்களில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக