ஞாயிறு, 5 மார்ச், 2023

தூத்துக்குடி வக்கீல் கொலையில் முக்கிய புள்ளி கைது இதுவரை கைதுசெய்யப்பட்டவர் விவரம்

 தூத்துக்குடி மாவட்டம் : 05.03.2023.

by police photo news

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரத்தில் கடந்த 22.02.2023 அன்று அய்யனடைப்பு சோரீஸ்புரத்தைச் சேர்ந்த பச்சைக்கண்ணன் மகன் முத்துக்குமார் என்ற வழக்கறிஞரை அவரது நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் கொலை செய்தனர்.

 இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து உடனடியாக சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்வதற்கு தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்  சுரேஷ்  தலைமையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  சண்முகம், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.



அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரின் தம்பி சிவக்குமாரை கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் அருகில் வைத்து கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் ராஜேஷ் மற்றும் பீட்டர் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க விடாமலும், வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வந்ததாக கோரம்பள்ளம் ராஜேஷ், பீட்டர் மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடந்துள்ளது தெரியவந்தது.



கொலை குற்ற செயலில் ஈடுபட்ட எதிரிகளை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேஸ்வரன் (29), அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் இராஜரத்தினம் (29),  ஆறுமுகநேரியைச் சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (29), செல்வக்குமார் மகன் முத்துராஜ் (23) மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த  ஜெயராமன் மகன் ரமேஷ் (49) ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் மீது பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது


மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கூட்டாம்புளியைச் சேர்ந்த நமோநாராயணன் (33) மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த லெட்சுமணபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தனிப்படை போலீசார் விசாரணையில் இந்த மேற்படி கொலை குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஆறுமுகநேரியை பூர்வீகமாக கொண்ட பெருமாள் மகன் பாஸ்கர் (29) என்பவரது ஆட்கள் என்றும், மும்பையில் இருந்து கொண்டு அவர்களை அனுப்பி கொலை செய்துள்ளார் என்றும்  தெரியவந்தது. மேலும் இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற 21 வழக்குகள் உள்ளது. 


இவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு உள்ளது. மேலும் இவர் ஆறுமுகநேரி ஆதவா ரெஸ்டாரென்ட் உரிமையாளர் பாலகருப்பசாமி என்பவரை 2022ம் ஆண்டு இவரது ஆட்களை அனுப்பி கொலை முயற்சி செய்த வழக்கிலும் தலைமறைவாக இருந்து வந்தார்.



மேற்படி கொலை குற்ற செயலுக்கு மூளையாக செயல்பட்ட ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாஸ்கர் (29) என்பவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக